லாசித் போர்ஃபுகன்

லாச்சித் போர்ஃபுகன்
(அஸ்ஸாம் சிவாஜி)

உலகில் செல்வம் மிக்க நாடாக பாரதம் திகழ்ந்திருந்த காலம். கிரேக்கர்களும், ஹுணர்களும், சகரர்களும் என்று பற்பல குழுவினரும் பாரதத்தை தத்தம் உடைமையாகவும், அதன் செல்வ வளமையை கொள்ளையடிக்கவும் பாரதத்தின் மேல் படையெடுத்தனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் விரட்டியடிக்கப்பட்டனர்; அல்லது ஜீரணிக்கப்பட்டு பாரதமயமாயினர். இவர்களை அடுத்து இங்கு படையெடுத்தவர்கள் முஸ்லிம்கள்.

பாரதத்தில் முகலாயர்கள் பாபர் காலம் முதல் ஔரங்கசீப் காலம் வரை நாட்டின் பெரும் பகுதியை வென்று மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை வடபகுதியில் நிறுவினார்கள். தென்புறத்திலும் பாமினி ஸுல்தான்கள் அரசுகளை அமைத்தனர். இப்படியாக தமது நாட்டை முழுவதுமாக அடிமைப்படுத்திவிட்டனர். அந்நிலையிலும் கூட தனது பகுதியை சுதந்திர ஹிந்து அரசாகவே தற்காத்து வந்தது காமரூபம் எனும் அஸ்ஸாம் பகுதியாகும்.

முகலாயர்கள் அஸ்ஸாமையும் விட்டுவிட விரும்பவில்லை. ஜஹாங்கீர் தன் ஆட்சிக் காலத்தில் அஸ்ஸாமின் மீது பலமுறை படையெடுத்தார். அதன்பின் ஷாஜஹானும் தன் ஆட்சியில் முயற்சித்தார். ஆனால் இவர்கள் அடி, உதை வாங்கி ஓடிப் போனதுதான் மிச்சம். ஔரங்கசீப் பாதுஷாவான பிறகு மீர்ஜுாலா என்ற தளபதியைப் பெரிய படைகளுடன் அஸ்ஸாமைக் கைப்பற்ற அனுப்பி வைத்தான். மீண்டும் மீண்டும் மீர்ஜுலா அஸ்ஸாமின் மீது படையெடுத்து தோல்வி கண்டாலும் முயற்சியை கைவிடவில்லை. பல தடவை முயன்று பயங்கரமான போருக்குப்பின் அஸ்ஸாமில் மீர்ஜுலாவால் கௌஹாத்தி நகரை மட்டும்தான் கைப்பற்ற முடிந்தது. கௌஹாத்தியின் கோட்டையான இதாகுரி கோட்டையை தன் வசப்படுத்திக்கொண்டான்.

மீர்ஜுலா கௌஹாத்தியை வென்றாலும் கூட அஸ்ஸாம் படைகளின் வீரத்தைக் கண்டு அரண்டும் போனார். அஸ்ஸாம் படைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதிலும் கொரில்லா போர்முறையில் மிகவும் திறமையாகவும், வீரத்துடனும் போராடினார்கள். கௌஹாத்திக் கோட்டையை வென்ற மகிழ்ச்சி மீர்ஜூலா விற்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அவனுடைய படைகளுக்கு அஸ்ஸாம் படைகளால் பலத்த சேதமேற்பட்டதுதான் காரணம். அஸ்ஸாம் படைகளுடன் போரிட்டு போரிட்டு, போர் என்றாலே முகலாய வீரர்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. இனிமேல் போரினால் அஸ்ஸாமை ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையே அவர்களிடமிருந்து போய் விட்டது. மீர்ஜுாலாவிற்கே உற்சாகம் இல்லாமல் போய் விட்டது. எனவே அல்லாவின் அருளால் கைவசமான கௌஹாத்தியைத் தக்க வைத்துக்கொண்டு மானத்தைக் காத்துக்கொள்வதும், அதன் பொருட்டு அஸ்ஸாம் மன்னருடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வதும் உத்தமம் என்று எண்ணினார் மீர்ஜுலா.

அந்த நேரத்தில் அஸ்ஸாமை கௌஹாத்தியைத் தலை நகராகக்கொண்டு ஆண்டு வந்த மன்னர் ஜெயத்வஜசிம்மன் ஆவார். போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் தலைநகரைவிட்டுப் பின்வாங்கி, அவர் அஸ்ஸாமின் கிழக்குப் பகுதிக்குச்சென்று, அங்கு ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொண்டார். அஸ்ஸாம் படைகள் வீராவேசத்துடன் போரிட்டு, எதிரியின் முதுகெலும்பை உடைத்தபோதிலும் அவர்களுக்கு பெரிய அளவில் படைச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன. எனவே அஸ்ஸாமியர்களுக்குச் சற்று ஓய்வு தேவைப்பட்டது. அதன் பிறகுதான் மீண்டும் கௌஹாத்தியை மீட்பது பற்றியும் சிந்திக்க முடியும் என்றெண்ணினார் ஜெயத்வஜ சிம்மன். அந்த சூழ் நிலையில் மீர்ஜுலாவிடமிருந்து ஒப்பந்தத்திற்கான அழைப்பு வந்தது. தான் அஸ்ஸாம் மன்னருடன் ஓர் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும், அதனால் அஸ்ஸாமில் போர் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு அமைதியான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்றும். ஒப்பந்தத்தினால் அஸ்ஸாமுக்கு நன்மை விளையும் என்றும் தூதர் மூலம் செய்தியனுப்பியிருந்தான் மீர்ஜுலா. மன்னர் ஜெயத்வஜ சிம்மனும் போரில்லாமல் சற்று அமைதியிருந்தால்தான் கௌஹாத்தியை மீட்பது பற்றிச் சிந்திக்க முடியும் என்று முடிவுசெய்திருந்தபடியால் அந்த அமைதி ஒப்பந்தத்தை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். எனவே ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார்.

கி.பி. 1663 ல் 'சிலாஜர்' என்ற கிராமத்தில் முகலாய் தளபதி மீர்ஜுலாவும், அஸ்ஸாம் மன்னர் ஜெயத்வஜ சிம்மனும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒப்பந்தத்தில் கண்ட விபரங்கள் கீழ்வருமாறு அடங்கின.
1. அஸ்ஸாமின் தலைநகரமான கௌஹாத்தி முகலாயர் வசம் கொடுக்கப்படவேண்டும்.
2. அஸ்ஸாம் ராஜ்யத்திற்கும் முகலாய அரசுக்கும் இடையே 'பர்' என்ற ஆறு எல்லையாக இருக்கும்.
3. டில்லி பாதுஷாவின் ஆதிக்கத்தை தான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக வருடா வருடம் அஸ்ஸா மிலிருந்து டில்லிக்கு பெருத்த எண்ணிக்கையில் யானைகளும், குதிரைகளும், மிகுந்த அளவில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களும் அஸ்ஸாம் அரசர் அனுப்பவேண்டும்.

இவைதான் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள். ஓயாது போராடி களைத்திருந்தாலும் ஓய்வு கருதியும், மேலும் போராட்டத்திற்கான தயாரிப்பு செய்துகொள்ளக் கால அவகாசம் ஏற்படுத்திக்கொள்ளவும் எண்ணி, மன்னர் ஜெயத்வஜசிம்மன் தற்காலிகமாகவாவது இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற எண்ணத் தோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனாலும் இந்த ஒப்பந்தம் அஸ்ஸாம் ராஜ்யத்திற்கு தீராத அவமானத்தையும், மானமுள்ள ஜெயத்வஜசிம்மனுக்கு மிகுந்த மன வேதனையையும் தந்தது. ஆனால் அந்த சமயத்தில் அதைவிட வேறு வழியுமில்லை. அந்த மன வேதனையினாலேயே மன்னர் ஜெயத்வஜசிம்மன் நோயுற்றுப் படுத்தப்படுக்கையில் விழுந்தார். தனது இறுதிநாள் வந்ததை உணர்ந்த மன்னர். அமைச்சர்களையும், தளபதிகளையும் வரவழைத்து அவர்களிடம், 'கௌஹாத்தியை இழந்ததும், பாதுஷா ஆதிக்கத்தை அங்கீகரித்ததும், என் மனதை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. நீங்கள் மீண்டும் தலைநகரை வென்று அஸ்ஸாமின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும். அப்படி உறுதியளித்தீர்களானால் நான் மன நிம்மதியுடன் உயிர் விடுவேன்" என்று கூறினார்.

அதை கேட்ட அங்கு கூடியிருந்த அனைவரும் கண் கலங்கினர். மன்னர் ஜெயத்வஜசிம்மனின் அந்த வார்த்தைகளால் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தனர். மன்னர் சாகும் தருவாயில் வரம் வேண்டுவது போல் கேட்டது, அவர்களனைவரையும் உணர்ச்சியின் உச்சநிலைக்கே கொண்டு சென்றது. அவர்கள் அனைவரும் சபதம் செய்வதுபோல், "மன்னா! கவலைப் படவேண்டாம் தாங்கள் நினைத்தாலே போதும். அது எங்களுக்கு கட்டளையாகிவிடும். மீண்டும் கௌஹாத்தியை கைப்பற்றுவதற்கு காலதாமதமாகாது. நமது படையினரின் வீரம், கொரில்லா போர்முறையில் உள்ள தேர்ச்சி ஆகியவை தங்களுக்குத் தெரியும். அதைத்தவிர நமக்கு இன்னொகு சாதகமான அம்சமும் ஒன்று உண்டு. அதாவது அஸ்ஸ்ஸாம் மலைப்பகுதியிலுள்ள ஒவ்வொரு அங்குலமும் நமக்கும் நம் படையினருக்கும் நன்கு அறிமுகமான பகுதிகளாகும். ஆனால் முகலாயர்களுக்கோ அப்படியில்லை. அவர்கள் வெட்டவெளி மைதானத்தில் போரிடத்தான் பழகியவர்கள். அஸ்ஸாமைப் பற்றிய விபரங்கள் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. எனவே தாங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் கௌஹாத்தியை மீண்டும் மீட்டு விடுவோம். இது உறுதி" என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட பின்னர், மன்னர் மகிழ்ச்சியுடன் கண்ணை மூடினார். ஜெயத்வஜசிம்மனின் மரணத்திற்குப் பிறகு அவருடைய தம்பி சக்கிரத்வஐசிம்மன் அரியணையில் அமர்ந்தார். முடிசூட்டு விழாவும் நடந்துகொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் பக்கத்து தேசத்து மன்னர்கள் அனைவரும் பரிசுகளை அனுப்பி தங்களது மரியாதையையும், பாராட்டையும் தெரிவித்தார்கள். அந்த வைபவத்தில் மன்னருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அது ஔரங்கசீப் தன் தூதரின் மூலமாகப் பரிசாக உடைகளை அனுப்பியிருந்ததுதான். ஏனெனில் அந்த உடைகளை மன்னர், தூதரின் முன்னிலையில் அணிய வேண்டும். அதன் பொருள் அவர் பாதுஷாவுக்கு அடிபணிந்து நடக்க ஒப்புக்கொள்கிறார் என்பதாகும். இதுதான் மரபு. சக்கிரத்வஜசிம்மன் மிகுந்த உணர்ச்சியும் தேசபக்தியும் மிக்கவர். எனவே தூதரைக் கண் சினம் கொண்டு கீழ்கண்டவாறு சூடாகப் பேசினார். “இந்த உடைகளை அணிவதைவிட சாவதே மேல். அஸ்ஸாம் ஹிந்துக்கள் மானம் கெட்டவர்கள் அல்ல. இந்த தகவலை பாதுஷாவிடம் கூறிவிடு“ என்றார்.

பட்டாபிஷேகத்திற்குப் பின்பு தனது முதல் வேலையாக மன்னர் செய்ய நினைத்தது கௌஹாத்தியின் மீட்புப் போராகும். எனவே இதைப்பற்றி அமைச்சர்களிடமும் தளபதிகளிடமும் கலந்தாலோசித்தார். அவர்கள் “தொடர்ந்த போர்களினால் அஸ்ஸாம் மிகுந்த நலிவடைந்திருக்கிறது. அந்த நிலையில் மீண்டும் டில்லி பாதுஷாவுடன் போர் தொடங்குவது தற்கொலைக்குச் சமமாகும். மக்கள் மனச்சோர்வு அடைந்தால் பாதுஷாவின் படை, பண வலிமைக்குமுன் தாக்குப் பிடிக்க முடியாது. அஸ்ஸாம் நிரந்தரமாக அடிமைத் தளையில் சிக்கிவிடும். எனவே விரைவாக நாட்டைச் சீர் படுத்தி, படைகளை வலிமையாக்கி, அதன் பிறகுதான் போர் தொடங்க வேண்டும்” என்று மன்னருக்கு ஆலோசளை கூறினார்கள்.

அஸ்ஸாமை எந்த விதத்தில் சீர்படுத்த வேண்டும்? கடந்த போரில் எண்ணற்ற படை வீரர்கள் மாண்டனர். ஆயுதங்கள் பறி போயின. ஆகவே புதிதாகப் படையில் பல வீரர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் போர் பயிற்சிகளைத் தரவேண்டும். ஆயுதங்களை வெகு விரைவாகத் தயாரிக்க வேண்டும். அஸ்ஸாம் அரசு இந்த வேலைகளை உடனடியாகத் தொடங்கியது. மேலும் தொடர்ந்த போராட்டங்களினால் நாட்டில் உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. பல கிராமவாசிகள் முஸ்லீம்களுக்கு அஞ்சி ஊர்களை விட்டு ஓடி விட்டார்கள். அவர்களை மீண்டும் வரவழைத்து ஏரெடுத்து உழுது விவசாயப் பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும். அஸ்ஸாம் மன்னர் அதிலும் முனைப்பாகச் செயல்பட்டார். “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்றவாறு அஸ்ஸாம் ஆயத்தப்படுத்தப் பட்டது. ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

போர் நேரத்தில் பல ராஜ்யங்களின் நட்பும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது. எனவே அந்த வேலைகளை சக்கிரத்வஜ சிம்மன் தானே நேரடியாக கவனித்து கொண்டார். ஜெயந்தியா மன்னர், கூச் பிஹார் மன்னர், காச்சார் மன்னர் மற்றும் சில மன்னர்கள் தொடர்பு கொள்ளப்பட்டார்கள்.

“அஸ்ஸாம் பகுதியில் முஸ்லீம் அரசாங்கம் ஏற்படுவது ஒரு கிரஹணகாலம் என்றே கூறலாம். அது நீடிக்காது. தாங்கள் செய்யும் சுதந்திர முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். நாங்களும் கூட தங்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்“ என ஜெயந்தியா மன்னனின் கடிதம் தெரிவித்தது. கூச்பிஹார் மன்னர் இதைவிட மிக்க உணர்ச்சிகரமாய் பதில் தந்திருந்தார். “தெற்குப் பகுதியில் சிவாஜி முகலாயர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் நமது திட்டத்தைத் தெரிவித்திருக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு வடகிழக்குப் பகுதியிலிருந்து முகலாயர்களை ஓட ஓட விரட்டுவோம்“, என்று பதிலளித்திருந்தார். இன்னும் பலமன்னர்கள் உதவி புரிவதாக வாக்களித்திருந்தார்கள். பல்லாண்டு போர் நீடித்தாலும் பற்றாக்குறை ஏற்படாதபடி உணவுப் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டன. ஆயுதங்கள் புதிதாகத் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திரப் போரைத் தலைமையேற்று நடத்தும் நாயகன் யார்? சக்கிரத்வஜசிம்மன் லாச்சித்தை தலைமைத் தளபதியாக நியமித்து போர் நடத்தவும், போர் காலத்தில் அஸ்ஸாம் நிர்வாகத்தை நடத்தி வரவும் அவருக்கு அதிகாரம் வழங்கினார். 'லாச்சித்' போர்ஃபுகன் ஆனார். ஃபுகன் என்றால் தளபதி. போர்ஃபுகன் என்றால் தலைமைத் தளபதி. லாச்சித்தைத் தலைமைத் தளபதியாக்க மன்னர் தன் கையினால் தங்கக் கைப்பிடிக் கொண்ட வாளை லாச்சித்தின் இடுப்பில் அணிவித்து சபையில் அவரைக் கெளரவித்தார்.

லாச்சித் 'லகுரான்' வம்சத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் பெயர் ‘ஸுக்தி' என்ற 'மொமாயிதா மூலி', ஸுக்தி ஜஹாங்கீர் படையெடுப்பை எதிர்த்து நடந்த போரில் அஸ்ஸாம் படையின் தளபதியாக இருந்தவர். மிகுந்த திறமையின் காரணமாக அவர் அஸ்ஸாம் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார். அஸ்ஸாமில் கிராம தன்னிறைவு திட்டத்தை தீட்டித் தந்த பெருமை இவரையே சாரும். இவர் மிகுந்த ராஜபக்தி கொண்டவர். இவர் தென் அஸ்ஸாமில் சுபேதாராக இருந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். காச்சார் மன்னர் இந்திரபல நாராயணன் இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இவரைப் புகழ்ந்து "தக்ஷிண அஸ்ஸாமின் பிரபு!" என்று கூறினார். அக்கடிதம் கண்டதும் ஸுக்தி மிகுந்த கோபமுற்றார். அவருக்குப் பதில் எழுதுகையில் சூடாக "என் மன்னரை இனிமேல் இப்படி அவமதிக்காதே. தக்ஷிண அஸ்ஸாமின் பிரபு நானா? அவரா?” என்று வினவினார். அப்பேற்பட்ட ராஜ விசுவாசமிக்க ஸுக்தியின் மகன்தான் லாச்சித்.

லாச்சித் அரசியலிலும், போர்க் கலையிலும் பிகுந்த வல்லமை பெற்றவர். மகாமந்திரி அதன் பட்கோஹினின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றியவர். பின்னர் 'கோடா பாரூவா' (குதிரைப் படை தளபதி), 'சீமால் குடியாஃபுகன்' (சீமால் கோட்டை அதிபதி), 'தோலட்சலியா பாருவா‘ (மன்னரின் சிறப்புப் படை தளபதி) போன்ற உயர்ந்த பதவிகளில் பணியாற்றி அனுபவம் மிக்கவர். அப்பேற்பட்ட லாச்சித் தலைமை தளபதியாக்கப்பட்டார். நடக்கப் போகின்ற போர் நடவடிக்கைகளும், போர்க் காலத்தில் அஸ்ஸாம் நிர்வாகமும் அவருடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

லாச்சித் பதவியில் அமர்ந்ததும் கௌஹாத்தியைக் கைப்பற்றும் போர் பற்றி திட்டமிட்டார். ஒற்றர்களின் மூலம் கௌஹாத்தியிலுள்ள நிலவரங்களைத் தெரிந்து கொண்டார். தேவையான புதிய கோட்டைகளைக் கட்ட வைத்தார். மகாராஷ்டிரத்தைப் போலவே அஸ்ஸாமும் மலைப்பிரதேசங்கள் நிறைந்த பகுதி. இங்கு பெரிய மலைத் தொடர்கள் தவிர பற்பல குன்றுகளும் உண்டு. வற்றாத ஜீவநதியான ‘பிரம்மபுத்திரா‘ இங்குதான் ஓடுகிறது. நதியின் ஓரத்தில் பல பெரிய மணல் மேடுகள் உள்ளன. காடுகள் நிறைந்த அஸ்ஸாமில் சிறிய நீரோடைகள் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும். நதிகளும் நீரோடைகளும் பல இடங்களில் குறுகிய பள்ளத்தாக்குகளில் ஓடிக் கொண்டிருக்கும். அஸ்ஸாமில் அடிக்கடி அடைமழை பெய்யும். பாரதத்திலேயே அதிக மழை பெய்யும் பகுதி அஸ்ஸாம்தான். இந்த இயற்கை சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கொரில்லா போர் முறை மூலம், லட்சக்கணக்கில் வரும் முகலாயப் படைகளை வெல்லத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கேற்ப அஸ்ஸாம் படை வீரர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது. வெற்றிகரமாக இந்த கொரில்லா போரை நடத்தியதால் லாச்சித்தை ‘அஸ்ஸாம் சிவாஜி‘ என்றும் கூறுவார்கள்.

புதிய கோட்டைகளைக் கட்டுவது மட்டுமன்றி அஸ்ஸாம் போர் முறையை அனுசரித்து குறுகிய பாதைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பெரிய சுவர்கள் கட்டப் பட்டன. இந்த இடங்களை லாச்சித் நேரடியாகவே பார்வையிட்டார். நாட்டு மக்களுக்குத் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்க அவர்களிடம் வீர உரையாற்றினார்.

கோட்டைகள் அமைப்பதும், பெரும் சுவர்கள் எழுப்புவதும், பெருமளவில் ஆயுதங்கள் தயாரிப்பதும், உணவுப் பொருட்கள் சேகரிப்பதும், படைகளுக்கு ஆள் சேர்ப்பதும், அவர்களுக்கு கடும் பயிற்சியளிப்பதும், மக்களனைவரையும் ஒருமுகமாகச் சுதந்திரப் பணியில் ஈடுபட வைக்க உணர்ச்சியூட்டுவதும் ஆகிய அனைத்தும் பெரும் ரகசியமாகச் செய்யப்பட்டன. முகலாயர்களுக்கு ஒரு சிறிது சந்தேகமும் வரமுடியாதவாறு கச்சிதமாகச் செய்தார் லாச்சித். அஸ்ஸாமியர் அமைதியாக இருப்பதாகவே முகலாயர்கள் எண்ணினார்கள். நிலைமை நீறுபூத்த நெருப்பாக இருப்பதை அவர்கள் அறியவில்லை.

கௌஹாத்தியில் எதிரியின் பலத்தை அறிந்த லாச்சித் தமது படைகள் வெல்லும் என்ற நம்பிக்கை ஏற் பட்டதும் முழுப்படைகளையும் ‘கட்காவ்‘ என்ற கிராமத்தில் கூட்டினார். அங்கு படைவீரர்கள் மத்தியில் மன்னர் சக்கிரத்வஜசிம்மன் மிகுந்த உணர்ச்சி பொங்க வீர உரையாற்றினார். “பசு பாதுகாப்பு, நம் தெய்வ உருவங்களின் பாதுகாப்பு, அந்தணர்களின் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளுக்காக நாம் போரிடப் போகிறோம். முகலாயர்களை கௌஹாத்தியிலிருந்து துரத்தி விட்டு வெற்றி வாகை சூடுங்கள். கௌஹாத்தியின் கோட்டையான ‘இதாகுரி’யில் உங்கள் வீரம் சோதிக்கப்படும். உயிரைப் பணயமாக வைத்து போரிடுங்கள். போர்க்களத்தில் மடிந்தால் வீர ஸ்வர்க்கம். புறமுதுகு காட்டி ஓடினீர்களானால் அஸ்ஸாமின் எதிர்காலமே இருண்டு விடும். நாடு முழு வதும் சர்வ நாசமாகி விடும். ஆகவே ‘வெற்றி அல்லது வீரமரணம்‘ என்ற தாரக மந்திரத்துடன் உத்வேகமாய்ப் போரிட்டு அஸ்ஸாமிற்குப் பெருமை தேடித் தாருங்கள்“ என்றுரைத்தார். இந்த வீர உரையானது படைவீரர்களிடம் உற்சாகத்தையும் ஆர்ப்பரிப்பையும் எழுப்பியது. கௌஹாத்தியில் பச்சைக் கொடியில் பறக்கும் சந்திரப்பிறை மறையும் காலம் நெருங்கியதாக அனைவருக்குமே தோன்றி விட்டது.

கி.பி.20.8.1667 அன்று அஸ்ஸாம் படை போர்க் கொடி ஏந்திப் புறப்பட்டு ‘காலியாபார்‘ வரை வந்தது. அங்கு படைகள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பகுதி பிரம்மபுத்திரா நதியின் மீது கப்பல் மார்க்கமாக அனுப்பப்பட்டது. மறுபகுதி தரை மார்க்கமாக அனுப்பப்பட்டது. முகலாயர்களை இருபுறமாகத் தாக்கும் திட்டத்தின்படி அஸ்ஸாம் படைகள் புறப்பட்டன.

கௌஹாத்தியில் முகலாய அரசின் தளபதிகளாக சையத் பிரோஜ், சையத்சானா என்பவர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு அஸ்ஸாம் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் தெரியாது. ஆனால் லாச்சித் ஒற்றர்கள் மூலம் எதிரியைப் பற்றி முழு விபரங்களையும் அறிந்து வைத்திருந்தார். அஸ்ஸாம் படைகளின் ரகசியங்களைப் பேணிப் பாதுகாத்தார். இது அஸ்ஸாம் பதவியாளர்களின் தேசபக்திக்கு ஓர் இலக்கணமாகும்.

அஸ்ஸாம் படைகள் மிகுந்த உற்சாகத்துடன் முன்னேறின. திங்கியாஃபுகன் என்பவரின் தலைமையிலான அஸ்ஸாம் படை ‘பாஹம்பாரி‘ கோட்டையைத் தாக்கி முகலாயர்களிடமிருந்து அதைக் கைப்பற்றியது. பின்னர் ‘காஜலி‘ என்ற கோட்டையையும் வென்று கைப்பற்றியது. லாச்சித் மணிகர்ணேஸ்வர மலை மீதிருந்து தனது படைகளுடன் கௌஹாத்தி மீது தாக்குதல் தொடுத்தார். திடீரென்று எதிர்பாராத அதிரடி தாக்குதல்களால் முகலாயர்கள் நிலை குலைந்தார்கள். பின்பு சமாளித்து மணிகர்ணேஸ்வர மலையைப் பிடிக்கப் படைகளையனுப்பினார்கள். அவர்களை கலாஞ்சு சந்திகையின் மகன் பேதமேலா என்ற தளபதி எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தார்.

முகலாயர்களுக்கு வங்காளத்தில் ரங்கமதியிலும், டாக்காவிலும் படை முகாம்கள் இருந்தன. ஆனால் தகவல் அனுப்பி அங்கிருந்து உதவி பெற போதிய அவகாசம் கொடுக்காமல் அதிரடித் தாக்குதல் நடத்தினார் லாச்சித். வேறு வழியின்றி தளபதி சையத்பிரோஜ் இதாகுரி கோட்டைக்குள் இருந்துகொண்டு சௌஹாத்தியைப் பாதுகாக்க முடிவெடுத்தான். 

‘இதாகுரி‘ பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் உள்ளது. அஸ்ஸாம் படையின் ஒரு பகுதியினர் இந்த கோட்டையைத் தாக்கினர். அதேசமயம் நதியின் வடக்குப் புறத்திலிருந்து மற்றொரு பிரிவினர் முகலாயர்களைத் தாக்கினார்கள். இவ்வாறு சுற்றித் தாக்குதல்கள் நடத்தி அவர்களை நிலைகுலையச் செய்தார் லாச்சித். இந்த வேளையில் அஸ்ஸாம் பிரதேசங்களில் அடைமழை பெய்யத் தொடங்கியது. அஸ்ஸாம் படைகள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி கொரில்லாப்போர் புரியத் தொடங்கினர். முகலாயர் படைகள் சம வெளி மைதானத்தில்தான் தங்கள் திறமையைக் காட்ட முடியும். மலைப் பகுதியில் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். அஸ்ஸாம் படைகள் இரவும் பகலுமாக ஓயாது கொரில்லாத் தாக்குதல் நடத்தி அபாரமாகப் போர் புரிந்தார்கள். கடைசிப் போர் கி.பி. 2.11.1667ல் நடந்தது. அஸ்ஸாம் படைகள் நதியின் மூலமாகவும், தரை மூலமாகவும் முற்றுகையிட்டுக் கடுமையாகப் போரிட்டு முகலாயர்களை அதிக அளவில் கொன்று குளித்தார்கள். ஏற்கனவே கோட்டையில் ஊடுருவிய அஸ்ஸாம் ஒற்றர்கள் சரியான நேரத்தில் கோட்டை மீதுள்ள பீரங்கிகளைச் செயல்படாமல் செய்து விட்டனர். பின்பு அஸ்ஸாம் படைகள் இதாகுரிக் கோட்டைக்குள் புகுந்து போரிட்டுக் கௌஹாத்தியைக் கைப்பற்றினார்கள். முகலாயர் படைகளுக்குப் படுதோல்வி கிடைத்தது. சையத் பிரோஜ், சையத் சானா, சையத் சர்தார். மீர்பக்ஷி ஆகிய தளபதிகள் கைதானார்கள். நான்கு வருடங்களாகக் கௌஹாத்தி கோட்டையின் மீது பறந்து கொண்டிருந்த முகலாயர்களின் பச்சை நிறப் பிறைக் கொடி இறங்கியது. அஸ்ஸாமியரின் மகிழ்ச்சிக்கிணங்க மீண்டும் புனிதக் காவிநிற பகவரக் கொடி பறக்க விடப்பட்டது.

கௌஹாத்தி மீண்டும் அஸ்ஸாமின் தலைநகர் ஆகி விட்டது. அங்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராஜசபை கூடியது. அன்று அங்கு மிக விமரிசையாக வெற்றி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் போர்க்களத்தில் வீர சாகசங்கள் புரிந்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார். லாச்சித்தின் வீர பராக்கிரமத்தையும் அபார போர் திறனையும் வெகுவாகப் பாராட்டி தாம் மிக்க மனநிறைவு பெற்றதாகத் தெரிவித்தார். இறுதியில் சபையில் லாச்சித் உரையாற்றினார். வெற்றிக்குக் காரணம் தான் அல்ல என்று பணிவுடன் சொல்லிவிட்டு மன்னரின் தலைமையையும், போர் வீரர்களின் சாகசத்தையும், மகாமந்திரியின் வழிகாட்டுதலையும் காரணங்களாக எடுத்துக் கூறினார். வெற்றியினால் ஏற்பட்ட மகிழ்ச்சி இனிமையானாலும் அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் நாம் மூழ்கி விடக் கூடாதென்று எச்சரித்தார். முகலாயரின் படுதோல்வியை ஔரங்கசீப் சகிக்க மாட்டார். நிச்சயம் அதைச் சரி கட்ட பெரும் படைகளை அனுப்பி வைப்பார். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்க உடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். அனைவரும் அப்படியே கருதினார்கள்.
வெற்றியினால் ஊக்கமும் உற்சாகமும் அடைவது இயற்கை. அஸ்ஸாம் மக்களிடம் கௌஹாத்தி வெற்றியால் அபாரத் தன்னம்பிக்கை ஏற்பட்டது. லாச்சித் இதைச் சாதகமாகப் பயன்படுத்திப் பலரை படையில் சேர்த்து ஒரு வலிமையான பெரிய படையை உருவாக்கினார். அஸ்ஸாம் ராஜ்யத்திற்கும் முகலாய ராஜ்யத்திற்கும் இடையில் ‘மானஹா’ என்ற ஆறு இருந்தது. அதன் மேற்குக் கரை பகுதியில் தாக்குதல் வந்தால் எந்தெந்த இடங்கள் இலக்காகும் என்பதை கவனித்து அந்தந்த இடங்களில் பலத்த பாதுகாப்புச் சுவர்களைக்கட்ட லாச்சித் ஏற்பாடு செய்தார். இந்தப் பகுதிகளில் நீண்ட போர் நடந்தாலும் தேவையான உணவுப் பொருட்கள், நிதி, ஆயுதங்கள் ஆகியவற்றுடன் தலைசிறந்த பாதுகாப்புப் படைகளையும் நியமித்தார். அஸ்ஸாம் ராஜ்யத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்கப் படைகளை ஏற்பாடு செய்தார். எல்லைப்பகுதியிலிருந்து கேந்திரமான இதாகுரி கோட்டைக்குச் செய்திகள் விரைவாக வந்துபோக தகவல் தொடர்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்தார். லாச்சித்தின் தலைமயிடம் இதாகுரியில் அமைக்கப்பட்டது.

லாச்சித் இதாகுரி கோட்டையிலும், தலைமை அமைச்சர், ‘அதன்பட்கோஹின் டோங்கரியா‘ பிரம்மபுத்திரா நதியின் வடகரை பகுதியிலும், அவருடைய அந்தரங்கச் செயலாளரான ‘லதும‘ என்பவர் காமாட்சி மலையிலிருந்து துவார கரிலா வரையுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் பொறுப்பேற்றனர். பரச்சேன் கோவோயி என்ற தளபதி துவாரகரிலகவிலிருந்து பராதோபா வரையுள்ள பகுதிக்கும், இதுபோல பலதளபதிகளும், சர்தார்களும் பல்வேறு பகுதிகளுக்குப் பாதுகாப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர் அஸ்ஸாம் முழுவதும் ராணுவமுகாம் போல் தோற்றமளித்தது.

கி.பி. 1656 லிருந்து ஒளரங்கசீப்பிற்கு மனக்கலக்கம் ஏற்படத் துவங்கியது. கி.பி. 1666ல் அவன் வீர சிவாஜியை ஆக்ராவில் கைது செய்தான். ஆனால் சிவாஜி தனது யுக்தியின் மூலம் பாதுஷாவின் முகத்தில் கரியைப் பூசித் தப்பி ஓடிவிட்டார். பாதுஷாவிற்கு இது தாங்க முடியாத அவமானமாக இருந்தது. அதோடு கூட அதிக அளவு படைகளை அனுப்பிப் பெரிய இழப்பையும் ஏற்று கைப்பற்றிய கௌஹாத்தியும் கைவிட்டுப் போனது பெருத்த அவமானமாக இருந்தது. கௌஹாத்தி கைவிட்டுப் போனதால் அஸ்ஸாம் பிரச்சினை மீண்டும் ஆரம்ப நிலைக்கு வந்தது.

ஔரங்கசீப் ஒரு பிடிவாதக்காரன். அவன் சிறிய தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உடையவனல்ல. எனவே மீண்டும் அஸ்ஸாமை வெல்ல பெரிய படையை அனுப்ப முடிவெடுத்தான். யாரை அனுப்புவது என்ற கேள்வி எழுந்தது. அஸ்ஸாமின் அருகிலுள்ள வங்கதேசத்தில் ஔரங்கசீப்பின் தாய்மாமன் ஷயிஸ்தகான் இருந்தான். நியாயமாக அவனைத்தான் அஸ்ஸாம் மீது படையெடுக்க அனுப்பவேண்டும். அது வசதியும் கூட. ஆனால் ஔரங்கசீப் அவனைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அவன் சிவாஜி மீது படையெடுத்துப் போய் லட்சக்கணக்கான வீரர்கள் மத்தியில் அவரது தங்கியிருந்த இடத்திலேயே சிவாஜியினால் கைவிரல்கள் வெட்டப்பட்டு ஓடி வந்த வீரன் அவன். எனவே ஷயிஸ்தகான் தலைமையில் காடுமலைகள் நிறைந்த அஸ்ஸாம் பகுதிக்குள் வங்காளப் படைகளை அனுப்பும் யோசனையைக் கைவிட்டான்.

வீர சிவாஜியை சமாளிக்க யாராலும் முடியாத குழ்நிலையில் ராஜபுத்திர மன்னர், ‘மீர்ஜராஜா ஜெயசிங்’கை போரிட அனுப்பிவிருந்தான் ஔரங்கசீப். அது உண்மைலேயே சிவாஜிக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. அதுபோலவே அஸ்ஸாம் மீதும் ஒரு ரஜபுத்திரனை அனுப்பி வைத்தால் என்ன? என்றெண்ணினான். உடனே அவன் மனதில் ராஜா ஜெயசிங்கின் மகன் ராமசிம்மன் நினைவிற்கு வந்தார். ராமசிம்மன் சிறந்த போர்த்தளபதி. தில்லியில் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு வீரர்களிடம் மிகுந்த செல்வாக்கிருந்தது. எனவே அவரை வெளியிலனுப்புவது நல்லது என்றெண்ணினான் பாதுஷா. அது மட்டுமின்றி சிவாஜி தப்பியோட ராமசிம்மன் உதவினாரோ என்ற சந்தேகமுமிருந்து. எனவே ஒரு ஹித்து தளபதி ஹிந்து மன்னருடன் மோதட்டும். வென்றால் லாபம் என்றெண்ணி அஸ்ஸாம் மீது ராமசிம்மனை படையெடுக்க போர்த்தளபதியாக நியமித்தார். அவருக்குத் தங்கக் கைப்பிடியுள்ள வாளைத்தந்து கௌரவித்தான் ஔரங்கசீப். பாதுஷா ஹிந்து தளபதிகளை நம்புவதில்லை. ஆகவே ராமசிம்மனுடன் உதவிக்காக சாக்கு சொல்லி ரஷீத்கான், மீர்ஜா சையத்தீவான், மீர்ராஜ் தீவான், பஹலோல் கான் ஆகிய தளபதிகளை அனுப்பினான்.

30.000 காலாட்படை, 18,000 குதிரைப்படை, 15,000 பீரங்கிப்படை ஆகியவற்றுடன் அஸ்ஸாமை நோக்கிப் புறப்பட்டார் ராமசிம்மன். ஒற்றர்கள் மூலம் லாச்சித் இந்தத் தகவலை உடன் அறிந்தார். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த அவர் உடனடியாகப் போர் நடவடிக்கைகளைத் துவக்கத் தானே குதிரை மீதேறி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சுற்றுப் பயணம் செய்தார். புதிதாக குழிகள் வெட்டப்பட்டன. அகழிகள் தோண்டப்பட்டன. சில இடங்களில் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டன. கோட்டை கொத்தளங்கள் மீது பீரங்கிகள் ஏற்றப்பட்டன. அனைவரும் உற்சாகம் பொங்கப் போர் வேலைகளில் ஈடுப்பட்டனர்.

அது போர்க்கால நடவடிக்கை. எனவே கட்டுப்பாடு மிகவும் தேவை. எந்த நேரத்தில் எந்த வேலையை முடித்து விட வேண்டுமோ அதைத் தாமதமின்றி முடிப்பது அவசியம். யாராவது கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். குறிப்பிட்டக் குற்றங்களுக்குக் குறிப்பிட்ட தண்டனை என அறிவிக்கப் பட்டது. கௌஹாத்தி அருகில் உள்ளது "அமீன் காவ்" என்ற கிராமம். அங்கு பலத்த சுவர் கட்டப்பட வேண்டியிருந்தது. அந்த வேலையை லாச்சித்தின் மாமனார் ஏற்றார். அந்த வேலையை முடிக்கவேண்டிய கெடு காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வேலை மந்தமாக நடந்தது. நமது மாப்பிள்ளைதானே உச்ச அதிகாரி, நம்மை தண்டிப்பது யார் என்ற மமதையில் வேலையை மெதுவாகச் செய்தார். நிர்ணயிக்கப்பட்ட கெடுக்குள் வேலை முடியவில்லை. இதையறிந்த லாச்சித் தன் மாமனாரை தன்முன் ஆஜராக்க ஆணையிட்டார். அவர் செய்த குற்றத்திற்குப் போர்க்கால விதியின்படி என்ன தண்டனை என்பதை ஆராய்ந்தார். அதன்படி அவருக்கு மரணதண்டனை விதித்தார். இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வயதில் முதிர்ந்த சில சர்தார்கள் லாச்சித்தையணுகி உங்கள் மாமனாரைத் தண்டிக்க வேண்டாம், அவர் செய்தது முதல் குற்றமாகையால் மன்னித்து விடலாம் என்று கேட்டுக் கொண்டனர். இதைக் கேட்ட லாச்சித் வெகுண்டெழுந்து, "அஸ்ஸாமின் சுதந்திரம் பெரிதா? மாமனார் பெரிதா? இவரை மன்னித்து விட்டால் இனி தொடர்ந்து முதல் குற்றங்களை மன்னித்துக் கொண்டே போக வேண்டியதாகாதா?" என்று கூறி தனது மாமனாருக்குச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். இதன் மூலம் படைகளும் மக்களும் சுட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். தங்களின் கடமைகளை மின்னல் வேகத்தில் செய்து முடித்தனர்.

ராமசிம்மன் படைகளுடன் டாகா நகருக்குப் போனார். ஷயிஸ்தகான் அவரை அங்கு அன்புடன் வரவேற்றார். இதற்கு முன் நடந்த போர்களில் முகலாயர்களின் அனுபவங்களை எடுத்துக் கூறி மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் போரிட அறிவுரை கூறினார். தன் படைகளிலிருந்து 20,000 படை வீரர்களைத் தந்து உதவினார். ராமசிம்மன் புறப்படும் பொழுது அஸ்ஸாமைப் பற்றிய விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டார். அஸ்ஸாம் காடு, மலை, ஆறு, மணல் மேடுகள், விஷ ஜந்துக்கள் நிறைந்த பகுதி மட்டுமின்றி மாந்திரீகத்திலும் புகழ் பெற்றது. எனவே டில்லியிலிருந்து ‘ஆவலியாக்கள்’ எனப்படும் மாந்திரீகர்களையும் தன்னுடன் ராமசிம்மன் அழைத்துக் கொண்டு போனார்.

ராமசிம்மன் படைகளுடன் அஸ்ஸாமை நோக்கி வந்து கொண்டிருப்பதை அஸ்ஸாம் எல்லையிலிருந்து லாச்சித் பார்த்தார். ‘படைக்கடல்‘ என வர்ணிக்கத்தக்க முகலாயர் படை வந்து கொண்டிருப்பதைப் பார்த்து யோசித்தார். முகலாயர் படைகளுடன் நேரடி மோதல் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்றெண்ணி அதைத் தவிர்க்கத் தன் படைகளைப் பின் நோக்கி செல்லுமாறு உத்தரவிட்டார். இதைப் பார்த்த ராமசிம்மன் அஸ்ஸாம் படைகள் அச்சத்தால் பின்வாங்குவதாக எண்ணி தனக்கு நல்ல துவக்கம் என மகிழ்ந்து தன் படைகளை அஸ்ஸாம் பகுதிக்குள் முன்னேற உத்தரவிட்டார். அவர்கள் ‘ஹோஜோ‘ என்ற இடம் வரை சென்று முகாமிட்டனர். இதைத்தான் லாச்சித்தும் எதிர் பார்த்திருந்தார். ஹோஜோவை சுற்றியும் மணல் மேடுகள். அவைகளுக்கு பின் அஸ்ஸாம் படைகள் மறைந்திருந்தன. ராமசிம்மன் முகாமிட்டதும், இரவு நேரத்தில் அஸ்ஸாம் படைகள் மின்னல் போல் அதிரடித் தாக்குதல் நடத்தி எதிரிகளை துவம்சம் செய்து, அவர்களைக் கலவரத்திற்குள்ளாக்கினார்கள். அஸ்ஸாம் வீரர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கு போய்ப் பதுங்கினார்கள் என்பது ராமசிம்மனுக்குப் புலப்படவில்லை. எங்கு பார்த்தாலும் மணல் மேடுகள், அடர்ந்த காடுகள், குன்றுகள், இவை தவிர திட்டமிட்டுக் கட்டப்பட்ட பெரிய சுவர்கள் மற்றும் கோட்டைகள். இவற்றைக் கண்ட ராமசிம்மன் பிரமித்துப் போனார். மிகுந்த அச்சத்துடன் அஸ்ஸாம் போர் தான் நினைத்ததை விடப் பல மடங்கு தன்னைச் சோதிக்கும் என்றெண்ணினார்.

இது ஒரு புறமிருக்க மற்றுமொரு சங்கடம் ராமசிம்மனின் படைக்குள்ளேயே ஏற்பட்டது. தன்னுடன் அனுப்பப்பட்ட உதவியாளர் ரஷீத்கான் தன்னை ராமசிம்மனுக்கு சம பதவியில் இருப்பதாக எண்ணிக் கொண்டு ராமசிம்மனுக்குக் கீழ் பணிபுரிவது தரக் குறைவெனக் கருதினார். தனது வரவை அறிவிக்கும் வகையில் முரசு கொட்ட வைப்பதும், தன்னிச்சையாகப் படைகளுக்குக் கட்டளையிடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ராமசிம்மனுக்குப் பெருத்த தலைவலியை உண்டு பண்ணினார். இதனால் முகலாயப் படைகளுக்கும் இரண்டுத் தலைவர்களுக்குள் யார் உத்தரவிற்குக் கீழ்ப் பணிவது என்ற குழப்பம் வந்து குழம்பிப் போனார்கள்.

படைகளுக்குள் குழப்பம் ஒருபுறம். மறுபுறம் அஸ்ஸாம். படையினரின் கொரில்லா தாக்குதல்கள். இதனால் முகலாயர்களின் உற்சாகம் குன்றியது. அவர்களுக்குச் சமவெளிப் பகுதியில் தான் போர் புரிந்து பழக்கம். கொரில்லாப் போரைச் சமாளிக்க தெரியவில்லை. பல வீரர்கள் நோய்வாய்ப்பட்டனர். இந்த நிலையைப் பார்த்த ராமசிம்மன் போரை வெகு நாட்கள் நீடிக்காமல் விரைவில் முடிக்கத் துரித நடவடிக்க எடுக்கத் திட்டம் தீட்டினார்.

பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் கௌஹாத்தி அருகில் உள்ள கோட்டைகளில் ஒன்று ‘பாண்டு‘. அதை ‘ராணி ராஜா‘ என்ற தளபதி பாதுகாத்து வந்தார். இதாகுரியை தாக்குவதற்கு முன், அதன் அருகில் உள்ள கோட்டைகளை கைவசப் படுத்த ராமசிம்மன் எண்ணினார். பாண்டு கோட்டையின் மீது கடுமையான தாக்குதல் நடத்தினார். முகலாயப் படை கோட்டையின் வெளிச் சுவரை வெற்றிகரமாக உடைத்தது. ஆனாலும் அது அவர்களுக்குப் பயன் தரவில்லை. ராணி ராஜா மிக சாமர்த்தியமாக முகலாயப் படைகளை பின் வாங்கச் செய்து கோட்டையின் சுவரை விரைவாகக் கட்ட வைத்தார். அது மட்டுமின்றி முகலாயப் படைகளைக் கடுமையாக தாக்கிப் போரிட்டுத் தோற்கடித்தார். பல முகலாய வீரர்களைக் கைது செய்து அவர்களின் கைவிரல்களை வெட்டி லாச்சித்திடம் அவர்களையனுப்பினார். ராமசிம்மனுக்கு அங்கு படுதோல்வி ஏற்பட்டது.

கி.பி. 1669 ஜூலை மாதம் ராமசிம்மன் விரைவாக கௌஹாத்தியை கைப்பற்ற வேண்டும் என்றெண்ணினார். காலதாமதமானால் படைகள் இயற்கை சூழ்நிலையாலும், அஸ்ஸாமியரின் தாக்குதலினாலும் அவதிப்பட வேண்டியதாக இருக்கும். எனவே வெற்றியா? தோல்வியா? என முடிவு செய்யும் பெரிய போர் நடத்த முடிவு செய்தார். ஆனால் முகலாயப் படை வீரர்களோ தோல்வி மேல் தோல்வியினால் உற்சாகமின்றி துவண்டு போனார்கள். எனவே ராமசிம்மன் சில சின்னக் கோட்டைகளையாவது வென்று படைகளுக்கு ஊக்கம் தர முடிவு செய்தார்.

அப்படி முடிவெடுத்து ராமசிம்மன் தாக்கிய முதல் கோட்டை ‘கால்ஜோரா‘ என்பதாகும். அங்கிருந்த அஸ்ஸாம் தளபதி ‘மீரிசந்திகைபுகன்‘. அவரிடம் உள்ள படைகளை முகலாயர் படைகளுடன் ஒப்பிட்டால் மிக மிகக் குறைவு. இருப்பினும் அவர் ஒன்பது நாட்கள் பராக்கிரமத்துடன் போர் புரிந்து எதிரிகளை விரட்டியடித்தார்.
கால்ஜோராவில் தோற்ற ராமசிம்மன் ‘பாரம்பாஹி' என்ற கோட்டையை நோக்கிப் போரிடச் சென்றார். அந்தக் கோட்டை கௌஹாத்தியின் முன்புறமிருந்தது. லாச்சித்தின் நேரடி பார்வையில்தான் அந்த கோட்டையிருந்தது. அவர் வெகு சாமர்த்தியமாக முகலாயர் படைகளை ஒரு குறுகிய கணவாயிக்குள் ஈர்த்துப் பின் நான்கு புறத்திலிருந்து அதிரடி தாக்குதல் நடத்தி எதிரிகளை வேட்டையாடினார். அந்தப் போரில் பெரும் எண்ணிக்கையில் பீரங்கிகளும் பல ஆயுதங்களும் லாச்சித்தின் கைவசமாயின.

இந்த வெற்றி அஸ்ஸாம் படை வீரர்களுக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. முகலாயர்களின் முகாம் ‘ஆகியா குண்டி‘ என்ற இடத்தில் இருந்தது. அதை அஸ்ஸாமியர் ‘திங்கியாஃபுகன்‘ தலைமையில் கப்பல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் இருபுறமிருந்தும் தாக்குதல் நடத்தி ஆரம்பத்தில் வெற்றியைப் பெற்றனர்.

இதுவரை முகலாயப் படைகள் தாக்குதல் நடத்தித் தோற்றன. ஆனால் ‘ஆகியாகுண்டி‘ போரில் அஸ்ஸாமியரின் முன்னேறிய தாக்குதலுக்கு ஆளாகித் தோற்றனர். ராமசிம்மன் ஒரு ரஜபுத்திர வீரர். அவருடைய ஆணவத்திற்கும், வீரத்திற்கும் இந்தப் போர் ஒரு சவாலாக இருந்தது. இப்போரினால் ராமசிம்மன் மிகுந்த ஆத்திரம் அடைந்தார். ரோஷத்தில் அவரே நேரடியாகக் களத்திலிறங்கி போரிடத் திட்டம் தீட்டினார். நதியிலுள்ள அஸ்ஸாம் கப்பற் படைகளுக்கும் தரை மீதுள்ள படைகளுக்கும் இருந்த தொடர்பை முதலில் வெற்றிகரமாகத் துண்டித்தார். பின் தரைப்படையைத் தாக்கி முழுத் தோல்வியடையச் செய்தார். நதி மீதுள்ள படைகளுக்கும் பலத்த சேதம் விளைவித்தார்.

இந்த தோல்வி சக்கிரத்வஜசிம்மனுக்கு வேதனையளித்தது. ஆனால் முகலாயர்களுக்கு இந்த வெற்றியால் பெரிய பயன் ஏற்படவில்லை. அஸ்ஸாமில் மழைக்காலம் வந்துவிட்டது. அங்கு மழை என்றால் பேய்மழை. அனைத்து ஆறுகளிலும், நீரோடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதனால் முகலாயர் படைகளுக்கிடையில் தொடர்பு வைத்துக்கொள்ள முடியவில்லை. உணவுப் பண்டங்களையும் கொண்டுவர மிகுந்த சிரமமாக இருந்தது. பல இடங்களில் வைத்திருந்த உணவுபொருட்களை அஸ்ஸாமியர் கொள்ளையடித்தனர். அஸ்ஸாம் படைகளுக்கு அந்த மழை பழக்கமானதால் அவர்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இல்லை. எனவே கொரில்லா போர் நடத்தி முகலாயர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தனர்.

பாரம் பாஹி கோட்டையைப் பிடிக்கும் இரண்டாவது முயற்சியிலும் ராமசிம்மனுக்கு தோல்வியே ஏற்பட்டது. தன் வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டுமே எனக்கருதி மூன்றாவது முயற்சியாக 'ரங்க மஹால்' என்ற கோட்டை மீது படையெடுத்தார். முகலாயர் படை ரங்கமஹாலை நெருங்கியது. அஸ்ஸாம் படைகளும் பாதுகாப்பிற்கு தயார் நிலையில் இருந்தன. ராமசிம்மன் ஒரு பெரிய குன்றின் மீது ஏறி நின்று அஸ்ஸாம் படைகளை பார்த்தார். அந்தப் படையை 'கோஹாயிஃபுகன்' தலைமையேற்று வீரர்களை வியூகத்தில் அமைத்து அதன் பாதுகாப்பிற்காகச் சுற்றி யானைகளை நிறுத்தியிருந்தார். அந்த அமைப்பைப் பார்த்த ராமசிம்மனுக்கு வியப்பும், எதிரியின் திறமை கண்டு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கோஹாயிஃபுகனுக்கு 'பக்ததா' என்ற தூதர் மூலம் ஒரு மடலை அனுப்பி வைத்தார். "நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன். உன் வீரத்தைக் காண வேட்கைப்படுகிறேன்' என்றெழுதினார். அதற்கு "நாம் நேரில் சந்திக்க அவசியமில்லை. என் வீரதீரத்தை போர்களத்தில் பார்க்கலாம்“ என்று பதில் வத்தது. பின் நடந்த போரில் முகலாய படைகளுக்குப் படுதோல்வி கிட்டியது,

ராமசிம்மனுக்கு தன் வீரத்தினால் வெற்றிக்கனியைச் சுவைக்க முடியவில்லை. சூழ்ச்சியின் மூலம் காரியம் சாதிக்கலாம் என்றெண்ணினார். கடந்த போரில் கோஹாயிஃபுகானை தனியாகச் சந்திக்க விருப்பம் தெரிவித்ததும் ஒரு சூழ்ச்சிதான். ஒரு தலைமைத் தளபதி எதிரியின் தலைமைத் தளபதியுடன்தான் பேசவேண்டுமே ஒழிய அவருக்குக் கீழ்பணிபுரியும் தளபதியிடம் வேண்டிய அவசியமென்ன? கோஹாயிஃபுகன் அந்த சூழ்ச்சியால் பாதிக்கப்படவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடிக்க எண்ணிய ராமசிம்மன் லாசித்திற்கு கடிதம் அனுப்பினார். “லாச்சித்! நேற்று என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிப் படைகளை வாபஸ் வாங்குவதாக வாக்குறுதி கொடுத்தாயல்லவா? ஏன் இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை?“ என்ற கடிதத்தை ஒரு ஆள் மூலம் அனுப்பிவைத்தார். அந்த ஆள் போகும் வழியில் பிடிபட்டது போல் ‘மீரி சந்திக்கை ஃபுகன்’ கையில் சிக்கினார். மீரிசந்திக்கைஃபுகன் அக்கடிதத்தை படித்து, அதை நேரடியாக மன்னருக்கு அனுப்பித் தன் கடமையை பூர்த்தி செய்தார். கடிதத்தைப் படித்த மன்னருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. லாச்சித் ராஜதுரோகம் செய்கிறானா? என்ற அய்யப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார். அளவற்ற சினம் கொண்டு தலைமை அமைச்சரை அழைத்துக் கடிதத்தை காட்டி விஷயத்தை விவரித்தார். லாச்சித், தலைமை அமைச்சர் ‘அதன் பட்கோஹினுடன்’ நெருங்கிப் பழகியவர். அவரிடம் அந்தரங்கச் செயலாளராகப் பணி புரிந்தவர். எனவே அவர் அந்தக் கடிதத்தை நம்பவில்லை. அவர் மன்னரிடம் கூறினார், “ராஜா! இந்தக் கடிதம் ராமசிம்மன் நம்மை பிரிக்கச் செய்யும் தந்திரம். லாச்சித் எழுதிய கடிதம் கிடைத்தால் நாம் நம்பலாம். ராமசிம்மனால் எதுவுமே எழுதமுடியுமே! ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். சூரியன்கூட மேற்க்கில் உதிக்கலாம். ஆனால் லாச்சித் மட்டும் தேசதுரோகமோ, ராஜதுரோகமோ செய்யவே மாட்டார் என்றார். மன்னருக்கு மன நிம்மதி ஏற்பட்டது. ராமசிம்மனின் சூழ்ச்சியும் வீழ்ந்தது.

பிறகு ராமசிம்மன் சக்கிரத்வஜசிம்மனுக்கு ஒரு கடிதம் எழுதித் தன்னுடன் தனியாக நேருக்கு நேர் போருக்கு அழைத்தார். அதைப் பார்த்து மன்னருக்கு ஆத்திரம் வந்தது. அவர் “ராமசிம்மா! நான் ஒரு மன்னன். மன்னர்கள் மன்னர்களுடன்தான் தனிப்பட்ட போர் புரிவார்கள். நீ உன்னை மன்னன் என்று கருது கிறாயோ! நீ மன்னன் வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். ஆனால் தற்சமயம் நீ ஔரங்கசீப்பின் சேவகன். அரசருடைய வெண் கொற்றக்குடை உன் அறியணையின் மீது இல்லை. ஆகவே என்னுடன் போரிட உனக்குத்தகுதியில்லை” என்று பதில் எழுதினார். ராமசிம்மன் எல்லையில் இருப்பது ஆபத்து. எனவே அவரை உடனடியாக அடித்து விரட்ட வேண்டும் என்ற எண்ணம் மன்னரின் மனதில் ஏற்பட்டது.

ராஜா சக்கிரத்வஜசிம்மன் லாச்சித்தை ராமசிம்மன் படைகள் மீது நேரடித்தாக்குதல் நடத்த வற்புறுத்தினார். ராமசிம்மன் ‘அலாபாயி‘ என்ற கோட்டை மீது படைகளையனுப்பி லாச்சித்திற்கு ஒரு கடிதம் எழுதினார். “நீ ஒரு வீரனா? அல்லது கோழையா? ஏன் மறைந்திருந்து திருட்டுத்தனமாக தாக்குதல் நடத்து கிறாய்? வீரமிருந்தால் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்பது தானே?“ என்று கூறியிருந்தார். லாச்சித்திற்கு ஆத்திரமூட்டி அஸ்ஸாம் படைகளை கொரில்லா போரிலிருந்து நேரடிப் போருக்கு திரும்ப வைப்பதுதான் கடிதத்தின் நோக்கம்.

மன்னரின் கட்டளை ஒரு புறம். ரோஷத்தை தூண்டும் கடிதம் மறுபுறம். லாச்சித் நேருக்கு நேர் முகலாயப் படைகளை சந்திக்க முடிவெடுத்தார். முகலாயப் படைகளுடன் 'மீர் நவாப்' என்ற தளபதி 'அலாபாயி' கோட்டை மீது தாக்குதல் நடத்தினான். லாச்சித் முகலாயப் படைகளுடன் போரிட 20,000 படை வீரர்களை அனுப்பி, அந்த படைக்கு தலைமை தாங்க 'பேலன்ஃபுகன்’ என்ற தளபதியை நியமித்தார். அவருக்கு உதவியாக 'ஓபரதவாக்னியா ராஜகோவா', 'நாம தயாக்னியா ராஜகோவா', 'திகெள முகியா ராஜகோவா' என்ற மூவரையும் அனுப்பி வைத்தார்.

அஸ்ஸாம் படைகள் முகலாயப் படைகளுடன் நேருக்கு நேர் போரிட முன்னேறிக் கொண்டிருந்தனர். அஸ்ஸாம் படையில் வில்வித்தையில் தேர்ந்த வீரர்கள் இருந்தார்கள். ராமசிம்மன் இப்போரில் வெல்ல ஒரு தந்திரத்தைக் கையாண்டார். 'மதனாவதி' என்ற ராஜபுத்திரப் பெண்ணை முகலாயப் படைக்கு முன் நிறுத்தி முன்னேறச் செய்தார். அஸ்ஸாமியர்கள் பெண்ணைக் கொல்ல மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு அப்பெண்ணின் மீது அம்பு பாயாமல் போரிட வேண்டிய சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அது முடியாத காரியம். எனவே அதற்காக ஒரு மாற்றுத் தந்திரத்தைக் கையாண்டார்கள். சில வில் வீரர்களுக்கு அந்தணர்களின் வேடம் போட்டு படை முன்பு வைத்துக் கொண்டு போரிடப் புறப்பட்டார்கள். இதனால் ராமசிம்மனுக்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்தணர்களை கொல்ல 'மீர் நவாபிற்கு' ராமசிம்மனால் கட்டளையிட முடியவில்லை.

அஸ்ஸாம் படைகள் முன்னேறி முகலாயப் படைக்குள் புகுந்து போரிட்டனர். வில்வீரர்கள் தங்கள் அந்தணர் வேடத்தைக் கலைத்து தங்கள் வித்தையை காட்டத் துவங்கினர். இந்தத் தாக்குதலினால் முகலாயப் படைகளுக்கு பலத்த சேதம் உண்டானது. தவறுதலாகப் பாய்ந்த ஒரு அம்பினால் மதனாவதியும் கொல்லப்பட்டாள். மீர் நவாப் பிடிபட்டு லாச்சித்திடம் அனுப்பப் பட்டார். பின் அஸ்ஸாம் படை முகலாய கைதிகளுடனும் அவர்களது பல ஆயுதங்களுடனும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆலாபாயியை நோக்கிச் சென்றது.
ராமசிம்மன் கோபத்தால் கொதித்தெழுந்தார். நேரடிப் போரிலும் தோல்வியா? மானமே போய் விட்டதே! என்றெண்ணி வெறியுடன் உடன் திரும்பிப் போய் தன்வசமுள்ள அம்பர் குதிரைப் படையை எடுத்துக் கொண்டு அகர வேகத்தில் அஸ்ஸாம் படைகளைத் தாக்கினார். வெற்றிப் பெற்ற களிப்போடு அலாபாயியை நோக்கி சென்று கொண்டிருந்த அஸ்ஸாம் படையினர் இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்க வில்லை.

நீண்ட போருக்குப் பின்னர் அஸ்ஸாம் படைகள் களைத்திருந்தனர். அம்பர் குதிரைப் படையோ அப்பொழுதுதான் போர்க்களத்தில் குதித்திருந்தது. ஆகவே அஸ்ஸாம் படைகள் நிலைகுலைந்து படுதோல்வியடைந்தன. 10,000 வீரர்கள் வீரமரணம் எய்தினர். சேதமும் மிக அதிகமாக இருந்தது. இப்போரில் வெற்றிக்கனி முதலில் அஸ்ஸாம் படைகளுக்கு கிட்டினாலும் முடிவில் முகலாயர்கள் அதைத் தட்டிப் பறித்தனர்.

கோட்டை மீது நின்று இதையெல்லாம் பார்த்த லாச்சித் சோகமே உருவெடுத்த நிலையில் இருந்தார். அப்போது தன் தோள் மீது யாரோ கைவைப்பதை உணர்ந்த லாச்சித் திரும்பிப் பார்த்தார். அது தலைமை அமைச்சர் ‘அதன் பட்கோஹின்‘. “லாச்சித்! ஏன் வருத்தமடைகிறாய். சுதந்திரத்தைப் பாதுகாப்பது எளிதான செயலா? பல உயிர்களைப் பலியிடாமல் நமக்குச் சுதந்திர தேவியின் அருள் எப்படிக் கிட்டும். சும்மா வந்து விடாது சுதந்திரம். இந்த ஒரு போரில் தான் தோல்வி. இதுவே முடிவல்ல. இன்னமும் கோட்டைகள் அனைத்தும் நம் வசம்தான் உள்ளன. காடு, மலை ஆறுகள் நிறைந்த நிலப்பகுதி நம் வசம்தான் உள்ளது. இன்னும் பல திறமையான வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். நமக்கு என்ன குறை. மீண்டும் போரிட்டு வெல்வோம்“ என்று கூறி லாச்சித்தை உற்சாகப் படுத்தினார்.

‘அலாபாயி‘ கோட்டையின் அருகில் நடந்த போரில் ராமசிம்மனுக்கு வெற்றி கிடைத்தாலும் அவரால் அலாபாயி கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. இருந்த போதிலும் இந்த வெற்றி முகலாயப் படை வீரர்களுக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ”ராமசிம்மன் கௌஹாத்தி கோட்டையை தன்வசம் ஒப்படைக்கச் சொல்லி உத்தரவிட்டு லாச்சித்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு மகாராஜா அனுமதியின்றி ஒரு அங்குலம் இடம் கூட தரமுடியாதென்று லாச்சித் பதில் எழுதினார். அலாபாயி தோல்விக்குப் பிறகும்கூட அஸ்ஸாமியரின் மன உறுதியில் மாற்றமில்லை என்பதை ராமசிம்மன் புரிந்து கொண்டார். ராமசிம்மனுக்கு போரிட்டு வெல்வதில் அவ்வளவாக உற்சாகமில்லை. எப்படியாவது தன் பாதுஷா வழியில் குறுக்கு வழி யுக்திகளைக் கையாண்டு வெல்வது நல்லதாகத் தோன்றியது, சுலபமாகவும் தோன்றியது. லாச்சித்திற்குட்பட்ட பல தளபதிகளுக்குப் பரிசுகளை அனுப்பி அவர்களுக்கு பதவி ஆசை காட்டினார். அப்படி ஆசைக்கு மயங்கி நாட்டை காட்டிக் கொடுக்கும் நபர் உதாரணங்கள் நமது நாட்டின் வரலாற்றில் ஏராளம். ஏன்? ராமசிம்மனும் அவருடைய தந்தையும் அப்படிப்பட்டவர்கள்தானே. ஆனால் அன்றைய அஸ்ஸாமியர் ஒருவர்கூட தேசபக்தி, ராஜபக்தியை விட்டு சுயநலத்துக்காக கோடாலி காம்பு போல் செயல்படவில்லை. இது அந்த மண்ணிற்கே மிகுந்த பெருமையாகும். இதனால் ராமசிம்மனுக்கு போரைத் தவிர வேறு வழி தென்படவில்லை.

பிரம்மபுத்திராவின் தென்கரையில் கௌஹாத்தி உள்ளது. அதனுடைய கோட்டையான இதாகுரி அதற்கு சமீபத்தில் மேற்குப் புறம் உள்ளது. இதுதான் லாச்சித்தின் தலைமையிடம். அதற்கு மேற்குப் பக்கத்திற்கு அருகில் ‘அந்தாரு பாவி‘ என்ற பெரிய மணல் மேடு இருந்தது. கௌஹாத்திக்கு எதிர்புறம் நதியின் அக்கரையில் ‘அஸ்வக்ராந்த‘ என்ற அரண்மனை அஸ்ஸாமியர் வசமிருந்தது. அதற்கு மேற்குப் புறத்தில் சற்று தூரத்தில் ‘ஸராயிகாட்‘ என்ற துறைமுகம் முகலாயர் வசமிருந்தது. அதை மையமாக வைத்து தம் படைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதும் அஸ்ஸாம் படையினருக்கு பீதியை ஏற்படுத்தியதுமான குதிரைப் படையை பயன் படுத்தி தாக்குதல் நடத்த போர் திட்டம் தீட்டினார் ராமசிம்மன்.

முகலாயர்களின் பீரங்கிப் படைகள் அஸ்வக்ராந்தவையும், இதாகுரியையும் ஒரே சமயத்தில் தாக்க வேண்டும். அதே நேரத்தில் அம்பர் குதிரைப் படையை ‘ஸராயிகாட்‘ துறைமுகத்தில் கப்பல்களில் ஏற்றி அக்கரையிலுள்ள அந்தாருபாவி மணல்மேடு மீது கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அங்கிருந்து குதிரைப் படை பீரங்கிப் படைக்கு உதவியாக இதாகுரியை தாக்க வேண்டும். இது தான் ராமசிம்மனின் திட்டம். இத்திட்டத்தால் அஸ்ஸாம் படைகள் தனது குதிரைப் படையைக் கண்டு பீதியுற்றுத் தோற்று ஓடிவிடும் என்று நம்பினார். ‘ஸராயிகாட்‘ துறைமுகத்தில் அம்பர் படை கப்பலில் ஏறியது. கப்பல்கள் புறப்பட்டன. ராமசிம்மன் தன்னுடன் இரண்டு ஐரோப்பியர்களையும், ஐந்து முகலாய தளபதிகளையும் அழைத்துக் கொண்டுக் கிளம்பினார்.

அந்த நேரத்தில் அஸ்ஸாமின் சூழ்நிலை சோதனைக் குட்பட்டதாக இருந்தது. கி.பி. 1670 ஏப்ரல் மாதத்தில் ராஜா சக்கிரத்வஜசிம்மன் காலமானார். அவருக்குப்பின் ‘உதயாதித்தியன்‘ என்பவர் அஸ்ஸாமின் அரசரானார். தொடர்ந்து அல்லும், பகலும் போர்ப் பணிகள் புரிந்ததால் லாச்சித் தீவிர நோய்க்குள்ளாகி இதாகுரியில் படுத்தப் படுக்கையாக இருந்தார். தளபதிகள் உள்பட அஸ்ஸாம் படை வீரர்கள் அனைவரும் அம்பர் குதிரைப் படையை நினைத்தாலே கதிகலங்கினார்கள். அஸ்ஸாமின் சுதந்திரம் பறிபோகுமோ? அஸ்ஸாம் இஸ்லாமியரின் மதவெறி ஆட்சிக்கு அடிமையாகி விடுமோ? என்று அஞ்சினார்கள்.

ஸராயிகாட் கப்பல் படை துறைமுகத்திலிருந்து கப்பல்களில் அம்பர் குதிரைப் படை வெற்றி வாகை சூடும் எதிர்பார்ப்பில் கிளம்பியது. இதை அறிந்து அஸ்ஸாம் கப்பல் படை விரைந்து வந்து தாக்குதல் நடத்தி கப்பல்களிலிருந்த அம்பர் குதிரைப் படையை நாசமாக்கியிருக்க முடியும். கப்பல் போரில் அஸ்ஸாமியர்கள் ஈடுயிணையற்றவர்கள். ஆனால் அஸ்ஸாம் தளபதிகளுக்கு அம்பர் குதிரைப் படையினால் ஏற்பட்ட பீதியினால் அந்த எண்ணமே தோன்றவில்லை. அஸ்ஸாம் தளபதிகள் தம் கப்பல்களை கிழக்கு நோக்கி ஓட்ட கட்டளையிட்டார்கள். முகலாயப் படைகளுக்கு இந்த தகவல் தெரிந்து மகிழ்ச்சி ஆரவாரத்துடன் முன்னேறலானார்கள். இதைக் கண்டு அஸ்ஸாம் கப்பல் படையினர் பேயைப் பார்த்தது போல் பீதியடைந்து பின்னோக்கி ஓடத் தயாரானார்கள். லாச்சித் மற்றும் தலைமை அமைச்சருடைய பொருட்களை கரைக்கு கொண்டு சேர்க்க ஆரம்பித்தனர்.

அஸ்ஸாம் தளபதிகளின் இந்த முடிவு படுக்கையில் தீவிர நோய் வாய்ப்பட்ட வாச்சித்தின் காதை எட்டியது. அந்த முடிவு அஸ்ஸாமின் தற்கொலைக்குச் சமம். இத்தனை வருடங்கள் பட்ட சிரமமனைத்தும் வீணாகி விடும். அஸ்ஸாமின் சுதந்திரம் நிரந்தரமாகப் பறிபோகும். கோவில்கள் இழக்கப்படும்; பெண்கள் கற்பழிக்கப் படுவார்கள்; பசுக்கள் வதை செய்யப்படும். இந்த நிலையை எண்ணி லாச்சித் அமைதியிழந்தார். தன்னை தூக்கி கோட்டையின் சுவர் அருகே கொண்டு செல்ல உத்தரவிட்டார். அங்கிருந்து கீழே நதியிலுள்ள நிலை யைப் பார்த்தார். அங்கு அஸ்ஸாம் கப்பல்கள் பின் நோக்கி ஓடிவிடத் தயார் நிலையில் இருந்தன.

இதைக் கண்ட லாச்சித் உணர்ச்சி வசப்பட்டார் அவர் பேய் பிடித்தது போல் அசுர வலிமை பெற்றார். உடல் முடியாவிட்டாலும் மனதில் ஏற்பட்ட ஆவேசம் அவரைச் செயல்பட வைத்தது. போருடைகளை அணிந்து கொண்டு கோட்டையை விட்டு இறங்கி நதியிலுள்ள கப்பல் படையை நோக்கி சென்றார். அங்கு அவருக்கு சமீபத்திலுள்ள சில கப்பல்களுக்கு முகலாய கப்பல்களை தாக்கி போரிட உத்தரவிட்டார். அவர்கள் குழம்பிய நிலையில் அமைதியாக இருந்தார்கள். லாச்சித்திற்கு கோபம் வந்தது. "நான் தலைமைத் தளபதி கட்டளைகிடுகிறேன். அனைத்துக் கப்பல்களும் முகலாயர்களின் கப்பல்களைத் தாக்கிப் போரிடுங்கள் என்று உரத்தகுரலில் ஆணையிட்டார். ஆனால் யாரும் அசையவில்லை. லாச்சித் ஆவேசம் கொண்டு கோபத்துடன் கப்பல்களில் நின்று கொண்டிருந்த சில வீரர்களை நதியில் தள்ளிவிட்டார். ஒரு சிலரை அப்படி செய்ததும் படையில் புத்துணர்ச்சி பொங்கியது. ‘உடல் முடியாத நிலையிலும் தலைமை தளபதி தானே வந்து முகலாயர் கப்பல்களுடன் போரிட ஆணையிட்டார். செவி சாய்க்காதவர்களை அவரே தன் கைகளால் நதியில் தள்ளி விடுகிறார்' என்ற செய்தி படைகள் மத்தியில் பரவியது. இதைக் கேட்டவுடன் அனைத்து தளபதிகளும், வீரர்களும் வீராவேசத்துடன் தங்கள் கப்பல்களைத் திசை திருப்பினார்கள். கிழக்கு நோக்கி ஓடிய கப்பல்கள் மீண்டும் மேற்கு நோக்கி போரிட வேகமாகப் புறப்பட்டன.

அம்பர் குதிரைப் படையை தாங்கிய முகலாயர்களின் கப்பல் படை ஸராயிகாட்லிருந்து கிழக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. அஸ்ஸாம் படைகள் பின்னோக்கி ஓடுவதை அறிந்ததும் முகலாயப்படைகளும் தளபதிகளும் ஓய்வெடுத்துக் கொண்டே பயணம் செய்திருந்தனர். அஸ்ஸாம் கப்பல் படையினரின் திடீர் திருப்பம் முகலாயப் படைகளுக்குக் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கப்பலில் படுத்துக்கொண்டு ஹுக்கா புகை பிடித்துக் கொண்டிருந்த ரஷீத்கான் அங்கேயே கொல்லப்பட்டான். கப்பலிலிருந்த குதிரைகள் மிரண்டு நதிக்குள் குதித்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பின் முகலாயப் படைகள் சுதாரித்துப் போரிடுவதற்குள் அவர்களுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டது. பிறகு பிரம்மபுத்திரா நதியில் ஒரு மைல் அகலத்திற்குப் பயங்கர கப்பல் போர் நடந்தது. போரின் முடிவில் ஆயிரக்கணக்கில் முகலாயப் படையினர் வெட்டப்பட்டனர். குதிரைகள் கொல்லப்பட்டன. பல குதிரைகள் நீரோட்டத்தில் மூழ்கி மடிந்தன. இந்தத் தருணத்தில் அஸ்வக்ராந்த அரண்மனையிலிருந்து ‘நாராஹஜாரிகா’ என்ற தளபதி 2,000 பேர் கொண்ட படையை அழைத்துக் கொண்டு மேற்கில் உள்ள முகலாயர்களின் தரைப்படையை தாக்கி நதியோரம் தள்ளினார். அங்கு முகலாயப் படைகளை நதிக்குள் தள்ளி பரலோகம் அடையச் செய்ய கப்பல் படை செயல்பட்டது. காமாக்ஷி மலை, அஸ்வக்ராந்த, முக்கோணத்தில் பயங்கரப்போர் நடந்தது. பிரம்மபுத்திராவின் மற்றொரு பெயர் ‘லோஹித்‘ (சிவந்தது). இதை உண்மையாக்கும் விதத்தில் போர்வீரர்களின் இரத்தம் பிரம்மபுத்திரா நதியில் கலந்து சிவந்தது.

அஸ்ஸாம் படைகள் முகலாயப் படைகளை ‘பாண்டு‘ என்ற இடத்தைத் தாண்டிப் போகும் வரை மேற்கு நோக்கி ஓட ஓட விரட்டியடித்தனர். ராமசிம்மன் உயிர் தப்பி ஓடினார். ஒரு கப்பல் படையைப் பாண்டுவில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைத்தார் லாச்சித். அஸ்ஸாம் படைகள் தொடர்ந்து முகலாயப் படைகளைத் தாக்கி அவர்களை கொலை செய்தும் கொள்ளையடித்தும் துவம்சம் செய்தார்கள். ‘ஸராயிகாட் போர்’ என்று அழைக்கப் பட்ட இந்த போர் சரித்திரப் புகழ் பெற்றதானது. 

பின்பு ராமசிம்மன் லாச்சித்திற்கு ஒரு கருணை மனு போன்ற கடிதம் எழுதினார். அதில் “ஒவ்வொரு அஸ்ஸாம் படைவீரனும் கப்பல் ஓட்டுவதில் நிபுணன். போர்க்கலையில் தேர்ந்தவன். வாளையும் அம்பையும் பயன்படுத்துவதில் ஈடு இணையற்றவன், புத்திசாலி, பீரங்கி, துப்பாக்கி ஆகியவற்றைப் பயன்படுத்துவதிலும் வல்லவன், கோட்டைகள் கட்டுவதிலும், பெரிய சுவர்கள் கட்டுவதிலும், குழிகள் தோண்டுவதிலும், அகழிகள் வெட்டுவதிலும் அஸ்ஸாமியற்கு யாரும் ஈடாகமுடியாது. இப்பேற்பட்ட திறமைசாலிகளுடன் போரை நிறுத்திக் கொண்டு நான் திரும்பிப் போகிறேன். உங்கள் படைகள் எங்களை விரட்டி வேட்டையாடுவதை நிறுத்திவைக்க வேண்டுகிறேன்” என்று எழுதியிருந்தார்.

அதைப் பார்த்த லாச்சித் உண்மையான ஹிந்துவைப் போல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். தளபதிகளுக்கு போர் நிறுத்த உத்தரவிட்டார். மானஹா நதியின் அக்கரை வரை முகலாயர்களை விட்டு வர உத்தரவிட்டார். ஸராயிகாட் துறைமுகத்தில் நடந்த போர் இறுதிப் போராக அமைத்தது. முகலாயர்கள் அஸ்ஸாமிற்கு வெளியே நிரந்தரமாகத் தள்ளப்பட்டார்கள். அஸ்ஸாமின் சுதந்திரம் பேணிக் காக்கப் பட்டது. அஸ்ஸாம் மன்னரும் தளபதிகளும், படை வீரர்களும், நாட்டு மக்களும் வெற்றிக்களிப்பில் ஆனந்தக் கூத்தாடி வெற்றி விழாவை விமரிசையாக கொண்டாடினார்கள்.

இப்பேற்பட்ட பெரிய சாதனை பெரிய தியாகத்தினால்தான் முடியும். லாச்சித் தீவிர நோயினால் படுக்கையிலிருந்தார். அஸ்ஸாம் சுதந்திரப் போரில் தோற்கக் கூடாதென்பதற்காக அளவுக்கு மீறி மன உறுதியைக் காட்டி ஐராயி போரில் இறங்கியது, அவர் உடல் நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெற்றி விழாவிற்குச் சில நாட்களுக்குப் பின் அஸ்ஸாமின் சுதந்திரப் போரின் கதாநாயகன் தலைமைத் தளபதி லாச்சித் அமரரானார். தன் நாட்டின் சுதந்திரத்திற்கு ஒரு தளபதி எந்த அளவுக்கு முன்னோடியாக இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாரதத் தாய்க்குப் பாத மலராகத் தன்னை அர்பணித்துக் கொண்ட சிறந்த தேச பக்தர் லாச்சித் போர்ஃபுகன்.

லாசித் போர்புகானின் ஈடு இணையற்ற மாவீரத்தை இன்றும் அசாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். வருடந்தோறும் நவம்பர் 24ம் தேதி “லாசித் திவஸ்” (லாசித் தினம்) என்ற பெயரில் அசாம் அரசால் கொண்டாடப்படுகிறது. இளம் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து தயார் செய்யும் பாரத ராணுவத்தின் NDA பயிற்சி நிறுவனம் வருடந்தோறும் தனது மிகச்சிறந்த மாணவருக்கு லாசித் போர்ஃபுகன் தங்க பதக்கம் என்ற மிகவும் உயரிய விருதை வழங்குகிறது.

Popular posts from this blog

பெரிய கதைகள்