வெள்ளையத்தேவன்

 வெள்ளையத்தேவன்


    திருநெல்வேலிச் சீமை தந்த தீரம் மிக்க வீரன் வெள்ளையத்தேவன்.  நெஞ்சுரமும், போர்த்திறனும், நல்ல உடல்கட்டும், பேரழகும் கொண்ட வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். 

    வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவிற்குப் பிள்ளைகள் இல்லாததால் வெள்ளையத்தேவனை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.  வெள்ளையத் தேவன் நிகரற்ற வீரன். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவதில் மகாசூரன். 

    போர்க்களம் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம்.  வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் வலது கரம்.  வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப்பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். 

    அடங்காத காளை ஒன்றை வெள்ளையம்மாள் என்ற பெண் வைத்திருந்தாள்.  காளையை அடக்குபவர்களுக்குத்தான் நான் மாலையிடுவேன் என்று வீரசபதம் செய்திருந்தாள். ஆனால் காளையை யாரும் அடக்க முடியவில்லை.  இதை அறிந்த வெள்ளையத்தேவன் அக்காளையை அடக்கி வெள்ளையம்மாளை மணந்து கொண்டார். 

    இவர்களுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தனர் வீரபாண்டிய கட்டபொம்முவும் அவரது தம்பி ஊமைத்துரையும். இந்த நிலையில் தான் பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். 

    பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை பார்த்து இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டுதானா கட்டபொம்மன் மனக்கோட்டை கட்டுகிறான்? என்று எக்காளமிட்டுச் சிரித்தான். சமரசப் பேச்சுக்கு இடமில்லை, போர்தான் முடிவு என்று கட்டபொம்மன் முழக்கமிட்டதால் போர் தொடங்கியது. 

    போருக்கு புறப்படும்போது வெள்ளையத்தேவனு; வெள்ளையம்மாளும் புதுமணத் தம்பதிகள்.  அப்போதுதான் வெள்ளையம்மாள் கருவுற்றிருந்தாள். போருக்கு முதல்நாள் தீய கனவுகளைக் கண்டாள்.  இதனால் மறுநாள் போருக்கு புறப்பட்ட கணவனை போகவேண்டாம் எனத் தடுத்துப் பார்த்தாள். கெட்ட கனவுகள் வந்தது. எனவே என்னை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள். 

    வெள்ளையத்தேவன் பிடிவாதமாக மறுத்துவிட்டு பகைவருக்கும் ஒரு உயிர்தானே, அவனிடம் வாய்தாவா கேட்க முடியும்? மறவர் குல மங்கை போருக்கு கணவன் புறப்படும்போது அழலாமா? சிரித்துக்கொண்டு வழியனுப்பு வெள்ளையம்மா என ஆறுதல் சொல்லிவிட்டுப் போருக்குப் புலி எனப் புறப்பட்டார். 

    போர் உக்கிரமாக நடந்தது.  வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான்.  கோட்டையை பலமாக காவல் காத்தான்.  இவனது வீர ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன், யாரிவன் என்று கேட்க, வெள்ளையத்தேவன் என்றனர் ஆங்கிலச் சிப்பாய்கள்.  தந்திரமாக வெள்ளையத்தேவனைக் கொன்றுவிட்டு, கட்டபொம்மு ராஜாவை கைது செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்குத் திரும்பினர். 

    போர் முடிந்துவிட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்த வெள்ளையத்தேவனை, ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டுவிட்டான்.  இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத்தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தான். 

    வீரபாண்டிய கட்டபொம்முவுக்கு இந்தத் தகவல் போயிற்று.  அலறி அடித்துக்கொண்டு வந்து, இறந்த அவன் உடலை மடியில் வைத்துக்கொண்டு அழுதார. மகனே என்னைவிட்டு போய்விட்டாயே! என் வலக்கரத்தை இழந்திருந்தால் கூட நான் கலங்கி இருக்க மாட்டேனே. ஆனால் இப்போது என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே எனப் புலம்பினார். 

    கணவன் இறந்த செய்தி கெட்டு ஓடிவந்து போர்க்களத்தில் தலைவிரி கோலமாக ஒப்பாரி வைத்தாள் வெள்ளையம்மாள்.  கணவன் உடலைப் பார்த்து கதறி அழுத அவள், போர்முறைக்கு மாறாகத் தன் கணவனைக் கொன்றுவிட்ட கயவனைத் தேடிப் போனாள். பதுங்கி பதுங்கிப் போன அவள் எதிரிகளின் பாசறைப் பக்கம் போனபோது, ஆங்கிலேயச் சிப்பாய்கள் குடிபோதையில் உளறிக் கொண்டிருந்ததையும் அதில் இருந்த ஒருவனே வெள்ளையத்தேவனைச் சுட்டவன் என்பதையும் அறிந்து, வெள்ளையம்மாள் அவனைக் குத்திக் கொன்றுவிட்டு வெள்ளையத்தேவனின் சாவுக்கு பழி தீர்த்துக் கொண்டாள்.  கட்டபொம்மனின் வலது கரமாகத் திகழ்ந்த வெள்ளையத்தேவன் மாண்டதும், வீரபாண்டிய கட்டபொம்மு மகாராஜாவின் சரித்திரத்தில் அவருக்கு சரிவுகள் வரத்தொடங்கின என்றால் அது மிகை அன்று.


Popular posts from this blog

பெரிய கதைகள்